Saturday, October 1, 2011
சிறுகதை - அவள் கோவித்துக் கொண்டாள்
அவள் கோவித்துக் கொண்டாள்
ஒரு நாள் காலை சரஸ்வதி என் வீட்டிற்கு வந்தாள், சற்று சோர்வாக இருந்தாள், நான் அவளைப் பார்த்து ஏன் இலையுதிர்மரம் போல் கலை இழந்து காணப்படுகிறாய்? கொஞ்சம் தேநீர் சாப்பிடலாமா என்றேன். சரி என்பது போல் தலையசைத்தாள். கடையில் வாங்கிய பாக்கெட் பாலில் சூடான தேநீர் ஒன்றை வண்ண வண்ண நிறப் பூக்கள் வரையப்பட்ட பீங்கான் கப்பில் கொண்டு வந்து கொடுத்தேன்.
கால் மேல் கால்போட்டுக்கொண்டு மிக லாவகமாக அந்த சாய்வான நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அது ஒரு மழைக்காலம், சூடான தேனீரை தன் சிவந்த உதடுகளால் ஊதி அதன் ஆவியைப் பறக்க விட்டு மெல்ல இதழ்களால் சுவைத்தாள். பின் மெல்ல என்னைப் பார்த்தாள். அவள் ஏதோ கோபமாய் இருப்பது எனக்குப் புரிந்தது. அவள் மனதில் குழப்பங்கள் ஏற்படும்போது என்னிடம் விவாதிப்பாள். மக்களிடம் நான் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றாள். மக்கள் பலருக்கு எது கல்வி என்றே தெரியவில்லை? சரஸ்வதி பூஜை அன்று புத்தகத்திற்கு பூ பொட்டு வைக்கிறார்கள், கால்களில் பட்டுவிட்டால் தொட்டு வணங்குகிறார்கள் இதைப் பார்க்கும் போது என் மெய் சிலிர்க்கிறது. மனதில் வைக்க வேண்டிய கல்வியை மக்கள் ஏன் வெளியில் மட்டும் வைத்திருக்கிறார்கள்? என்றாள். அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அழகான தேநீர் குவளையைப் பார்த்து ரசித்து மேசையின் மீது வைத்தாள். நேரம் கிடைக்கும் போது நான் வருகிறேன் என்று சொல்லி விடை பெற்றாள்.
அதியமான், தமிழியல் ஆய்வாளர், செம்மொழ்த்தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.5
Subscribe to:
Posts (Atom)